Saturday, April 30, 2022

 அரசி இயல்


பல வீடுகளில்
பாலும் டிக்காஷனும்
ஓபிஎஸ்- இபிஎஸ் ஜோடி மாதிரி
சேர்ந்தாலும் சுகப்படாது

ஆனால் உன் கை பட்டால் 
அமித் ஷா - மோடி காம்பினேஷன் மாதிரி
அமோகமா இருக்கும்மா
நம்ம வீட்டு காப்பி என்றேன்
நாக்கை சுழட்டிக் கொண்டு ..

மென் நகை புரிந்தபடி
மேடம் சொன்னார்
' என்ன பொய் சொன்னாலும்
இரண்டாவது கப் காப்பியெல்லாம் 
உங்க அம்மாவோட போச்சு
என்னிடம் கிடைக்காது
யாருகிட்ட ...?"


இப்படியாக
இன்றைய காலை
ஒரு கப் காப்பிக்கு பொறாத 
இந்த கவிதையுடன் (?) விடிகிறது...



Tuesday, August 23, 2016

நம்பிடில் பெய்யும்...

காலண்டரைப் பார்த்தேன்
‘மழை வரும்” என்றது
வானத்தைப் பார்த்தேன்

பிழையது என்றது
என்றாலும் எடுத்துச்சென்றேன் குடையொன்றை
ஆகா...
மண்ணில் பொழியாத மழை இன்று
மனதிற்குள் பொழிவதை அனுபவித்தேன்..

Monday, July 25, 2016

எனக்குள் ஒருத்தி...

அடியே...
அடிக்கடி தென்படுவாய் முன்பெல்லாம்..
ஆளையே பார்க்க முடிவதில்லையே இப்போது
என்னாச்சு என்றேன்...
அருகில் இருந்தேன்
அடிக்கடி வந்தேன் என்றாள்
விலகிப்போனாயோ இப்போதென்று
வேதனையுடன் வினவினேன்...
ஆமாம்..உன் விழிப்பார்வையிலிருந்து விலகி
மூச்சுக்காற்றுடன் கலந்து
உனக்குள் இருக்கிறேன்-உன்னையே
உற்றுப்பார் என்றாள்
கவிதைக் காதலி!

Friday, December 5, 2014

வெளிச்சம் விற்பவள்...


விரித்து வைத்த 
வெள்ளை சிமெண்ட் சாக்கில் 
மண் அகல் விளக்குகள்
குவித்து வைத்து
சாயம்போன சேலையுடுத்தி
சாலையோரம் நின்றவளை கேட்டேன்
`எப்போதும் போகிற 
சீவல் கம்பெனியை விடுத்து
எதற்கு நிற்கிறாய் இன்று
விளக்கு விற்றுக்கொண்டு?
லாபம் அதிகமோ????`

சிரித்து விட்டு சொன்னாள்
`இத்தனை விளக்கும் விற்றால்கூட 
சீவல் கம்பெனி வேலையின் 
ஒருநாள் ஊதிய லாபம் வராது
இருப்பினும் 
எல்லா வீட்டிலும் எரிகிற விளக்கு
எங்கள் விளக்கு தான் என்கிற மகிழ்வை
அந்த காசு தராது...`

அதிர்ந்து நின்றேன்
அப்புறமும் சொன்னாள்
`இன்றைக்கும் நான் வேலைக்கு போனால்
எதில் ஏற்றுவீர்கள் உங்கள் வீட்டு தீபத்தை...???`

எனக்கென்னவோ அவள்விற்ற 
எல்லா விளக்கின் நுனித்திரியிலும் 
அந்த கேள்வியின் கருணையே
வெளிச்சமாய் துலங்கிடுமென தோன்றியது!



Friday, August 1, 2014



பறக்கிற தங்க குதிரை வேணும்பா
என்று கேட்ட மகளை
வெறுப்புடன் பார்த்து விட்டு
வெளியில் வந்த தந்தை
மிதிக்கிற சைக்கிள் ஏறி
போகும் வழியில் அற்புதம் போல்
பறக்கிற தங்ககுதிரை பார்க்கநேர்ந்தால்
பாக்கெட்டை தடவிக்கொண்டே
`என்ன விலைங்க அது?`என்று
கேட்காமல் கடப்பதேயில்லை அவ்விடத்தை..

Tuesday, July 15, 2014

 

 

மீசை முளைத்த கிளி

பெரியகோயிலுக்கு போகும் பாதை
பெரிய மீசையுடன் அந்த கிழவர்...
திறந்து தின்னக்கொடுத்தால்
முழுநெல்மணியொன்றை கொறித்து
ஏதாவதொரு சீட்டைஎடுத்து
எறிந்து உள்செல்லும் மெலிந்த கிளி...
முரண்டு பிடிப்பதாய் தோன்றும் போதெல்லாம்
கிழவர் பெரியமீசையை நீவிவிடுகிறார்...
கிளி வெட்டப்பட்ட சிறகை ஒடுக்கியபடி
பின்னால் நடந்தே கூண்டிற்குள் செல்கிறது
பொழுதுபோகாமல் கிளியை உற்றுநோக்கி
பெரியமீசையை நீவிவிடும் போதும்கூட
அது அச்சத்தில் நடுநடுங்கி 
சிறிது எச்சம் கூட விடுகிறது...
வாகனநெரிசல் மிகுந்த பொழுதொன்றில்
காக்கிஉடுப்பணிந்த 
மீசை அரும்பிவரும் இளம்பையனொருவன்
லத்தியுடன் நெருங்கி வருகையில்
திடீரென்று...
கூண்டிற்குள் நடுங்கும் கிளிக்கு
பெரிய மீசை முளைக்கிறது.....!


Saturday, July 12, 2014





வாரம் ஒருமுறை சவரம் செய்கையில்
உன்னை பார்க்க ஆரம்பித்தேன்...
இன்றோ..
நாளுக்கொருமுறை
சவரம் செய்ய வேண்டியுள்ளது..
அடிப்போடி...
மயிர் வளர்ந்த அளவிற்கு கூட
உனக்கு என்மேல்
காதல் வளரவில்லை..